பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
மண் திணிந்த நிலனும்,
நிலன் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு 5
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்
வலியும், தெறலும், அளியும், உடையோய்!
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண்தலைப் புணரிக் குடகடல் குளிக்கும் 10
யாணர் வைப்பின், நன்னாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ, பெரும!
அலங்குளைப் புரவி ஐவரோடு சினையி
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருது, களத்து ஒழியப் 15
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்;
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச் 20
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட்டு இமயமும், பொதியமும் போன்றே!
பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகராயர்.
பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்.
திணை: பாடாண்.
[திணை என்ற சொல் நிலம் சார்ந்து எழுந்தது, ஒவ்வொரு நிலத்து மக்களுக்கும் நிலத்தின் தன்மைக்கேற்ப இயல்புகள் மாறுபடும்.அவற்றைக் குறித்துப் பாடும் புலவர் அதற்கு இன்ன திணை சார்ந்தது என்று ஒரு குறிப்பு வரைவார்.
புறநானூற்றுப் பாடல்களைத் தொகுக்கும்போது அது எந்த திணை, எந்த துறை என்ற விளக்கம் இடம்பெறும்.]
துறை: செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆகும்.
(“பாஅல் புளிப்பினும், பகல் இருளினும், நால்வேத நெறி திரியினும், திரியாச்சுற்றமொடு முழுதுசேண் விளங்கி, நடுக்கின்றி நிலீயரோ” என்றதனாற் செவியறிவுறூஉ ஆயிற்று.
‘இமயமும் பொதியமும் போன்று நடுக்கின்றி நிலீஇயரோ’ என்றதனால், வாழ்த்தியல் ஆயிற்று.
‘பகை நிலத்து அரசர்க்குப் பயந்தவாறு கூறிப், பின்னர்த் திரியாச் சுற்றமொடு விளங்கி, நடுக்கின்றி நிற்பாய்’ என அச்சந்தோன்றக் கூறி ஓம்படுத்தலின், ‘ஓம்படை வாழ்த்து’ ஆயிற்று என்பர் நச்சினார்க்கினியர் (தொல். புறத். சூ. 36 உரை)
பாரதப் பெரும்போர் நடந்த நாளிலே, உதியஞ் சேரலாதன் பாரதநாட்டை ஆண்டான். கதிரவன் தோன்றும் கீழ்க்கடலும், மறையும் மேற்கடலும், இடைப்பட்ட புதுவருவாய் குன்றாத பெருநிலப்பரப்பும் அவனுக்கே உரியன. பொறுமை, ஆராய்ச்சி விரிவு, ஆற்றல், ஆட்சித் திறன், அருள் ஆகியவற்றிலே ஐம்பெரும் பூதங்களான நிலனையும் வானையும் காற்றையும் நெருப்பையும் நீரையும் ஒத்தவன் அவன் . பால் புளித்தாலும், ஞாயிறு இருண்டாலும், மறைநெறி திரிவுற்றுப் பிறழ்ந்தாலும், கடமையினின்றும் சற்றும்பிறழாதவர் அவன் மந்திரச் சுற்றத்தினர். அவனைப்புலவர்., ‘பொருந! வான வரம்ப! பெரும!’ என விளித்து, “உயர்வால் இமயமும், புகழால் தமிழ் வளர்த்த பொதியமும் போன்று நீ நெடிது வாழ்வாயாக!” என்றார்
சொற்பொருள்: 1. திணிந்த - செறிந்த. 2. ஏந்திய - தாங்கிய. 4. தலைஇய - தலைப்பட்ட 7. போற்றார் பகைவர். சூழ்ச்சி - ஆராய்ச்சி. அகலம் - விரிவு. 9. தெறல் செருக்கு அடக்கல். அளி - அருள். 11. யாணர் வைப்பின் - புது வருவாய் பொருந்திய ஊர்களை உடைய. 13. அலங்கு உளை அசையும் பிடரி மயிரை உடைய. 14. தலைக் கொண்ட - தம்பாற் கொண்ட. பொலம்-பொன். 16. மிகு பதம் - மிக்க உணவு 19. சுற்றம் -மந்திரச் சுற்றம்; அமைச்சர், படைத் தலைவர் ஆகியோர். 20 அடுக்கத்து - மலைச்சரிவின் கண். 21. நல்வி-மான் கன்று. பிணை-பெண்மான். 24. கோடு-மலை உச்சி. துஞ்சம்-உறங்கும்.